ரஷ்யாவுக்கு எதிராக ஜி-7 நாடு தலைவர்களின் அதிரடி நடவடிக்கை!
ரஷ்ய மத்திய வங்கி பரிமாற்றங்களில் தங்கத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதாக ஜி-7 நாடு தலைவர்கள் அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Jutin Trudeau), பிரான்ஸ் ஜானதிபதி இம்மானுவேல் மாக்ரோன் (Emmanuel Macron), ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் மத்திய வங்கி பரிமாற்றங்களில் தங்கத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.
ரஷ்ய மத்திய வங்கி 130 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9.75 லட்சம் கோடி) மதிப்புள்ள தங்கத்தை இருப்பாக வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் ரஷ்ய அரசாங்கத்துக்கு சொந்தமான 48 பாதுகாப்பு நிறுவனங்கள், 328 எம்.பி.க்கள், டஜன் கணக்கிலான ரஷிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.