கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து: உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை
உலக நாடுகளில் ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.
உருமாறிய புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் பரவல் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால், உலக நாடுகள் பல மீண்டும் பல்வேறு வகையான கட்டுப்பாடகளை விதித்து வருகின்றன.
அமெரிக்காவில், ஓமிக்ரான் தொற்றால் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது. 50 வயது மதிக்கத்தக்க நபர், குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். மேலும், குறித்த நபர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றே அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரஸ் அதானம் தெரிவிக்கையில், ஓமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தள்ளி வைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம்.
வாழ்க்கையை இழப்பதை விட நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பதே சிறந்தது. தற்போது கொண்டாடிவிட்டு பிறகு வருத்தப்படுவதை விட, தற்போது ஒத்திவைத்துவிட்டு பிறகு கொண்டாடலாம். வாழ்க்கையில் நாம் கடினமான முடிவுகள் முன்னெடுப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.