எத்தனை பிரதமர் மாறினாலும் நான் மாறல; 10 ஆண்டுகளாக ஒரே வேலையை செய்யும் சேவகன்
இங்கிலாந்து பிரதமர் வீட்டுக்கு எலித்தொல்லையை குறைக்க கொண்டுவரப்பட்ட பூனை 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இங்கிலாந்து பிரதமரின் அரசு வீடு லண்டனில் 10 டவுனிங் வீதியில் உள்ளது. இங்கிலாந்து பிரதமராக டேவிட் காமரூன் இருந்த போது அவரது அரசு வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தது. இதற்காக அவர் வீட்டில் ஒரு பூனை வளர்க்க விரும்பினார்.
ஒரு நாள் அவரது வீட்டின் அருகே மாநகராட்சி ஊழியர்கள் ஒரு வாகனத்தில் தெருவில் சுற்றி திரிந்த பூனைகளை பிடித்து செல்வதை கண்டார். அதில் இருந்து ஒரு பூனையை தன் வீட்டில் வளர்ப்பதற்கு கேட்டார். இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் வழங்கிய பூனை,அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூனின் அரசு வீட்டில் வளர்ந்து வந்தது.
அங்கு தொல்லை கொடுத்த எலிகளையும் பிடித்தது. டேவிட் கேமரூனுக்கு பிறகு தெரசாமேயும், இப்போது போரீஸ் ஜான்சனும் பிரதமராக உள்ளார். எனினும் பிரதமரின் வீட்டில் இருந்த பூனை மட்டும் மாறவேயில்லை. அந்த பூனை பிரதமர் வீட்டுக்கு சென்று நேற்றுடன் 10 ஆண்டுகள் முடிந்தது. இதனை பிரதமர் வீட்டு பணியாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் பூனை வந்த பிறகு எலிதொல்லை குறைந்திருப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.