பிரான்ஸில் நடைமுறைக்கு வந்த மாற்றங்கள்: மக்கள் எங்கெல்லாம் செல்லலாம்!
பிரான்ஸில் இன்றிலிருந்து விதிமுறைகளின் மூன்றாம் கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றில் மக்கள் உள் புறங்களில் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் தங்கள் முகவரி மற்றும் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். கட்டிடங்கள் மற்றும் வெளிப்புறங்களில் மக்கள் 100% அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனினும் ஒரு மேசையில் ஆறு நபர்கள் மட்டும் தான் அமர முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தை தவிர பிற நாடுகளிலிருந்து வரும் மக்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவர்களுக்கு அனுமதி உண்டு. இரவு ஊரடங்கு 11 மணியாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
உள் நாட்டிற்குள் பயன் படுத்தும் விதமாக பிரெஞ்சு சுகாதார பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டு, இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.
நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையில் மக்கள் தான் செல்ல வேண்டும். அவர்களும் சுகாதார விதிமுறைககளை பின்பற்ற வேண்டும். 5000 மக்கள் வரை கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உண்டு. எனினும் சுகாதார பாஸ்போர்ட் அவசியம்.
சில விதிமுறைகளுடன் அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், கடைகள் போன்றவை மக்களை அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கிறது. அலுவலகங்களுக்கு மீண்டும் மக்கள் செல்ல தொடங்கியுள்ளனர். திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் மக்களின் எண்ணிக்கை பாதி அளவிற்கு அனுமதிக்கப்படுகிறது.
இறுதி சடங்கு நிகழ்வுகளில், 75 நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் பொது வெளியில் 10 நபர்களுக்கு மேல் கூடி நிற்க கூடாது. சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பொது வெளிகளில் இருக்கும் கட்டிடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அதனை மீறினால் 135 யூரோக்கள் அபராதம் செலுத்த வேண்டி வரும். மேலும் இரவு நேர விடுதிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.