சென்னையில் இலங்கை இளம் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த சோக சம்பவம்
தமிழகத்தில் சென்னையில் வீதியில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்து இலங்கைப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை போரூர் லட்சுமி நகரில் இலங்கையைச் சேர்ந்த செல்வகுமார் குடும்பத்தினர் வசித்து வருகின்றதாக கூறப்படுகின்றது.
அவர்களது மகள் 23 வயதான ஷோபனா, கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிந்து வரும் நிலையில் அவரது சகோதரான ஹரீஸ் தனியார் பாடசாலையில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் ஷோபனா, தனது தம்பியை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்றபோது மதுரவாயல் பைபாஸ் சாலை, சர்வீஸ் சாலையில் இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் அருகில் சென்ற வேன் மீது உரசியது.
இதில் அவர் தம்பியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வேகமாக வந்த மணல் லொறியின் சக்கரத்தில் ஷோபனா சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.