வான்கூவர் சாலையில் கொல்லப்பட்ட குழந்தை: புகைப்படம் வெளியிட்டு கதறும் தாயார்
வான்கூவர் நகரில் சாலையில் நடந்து சென்றவர் மீது வாகனம் மோதியில், அவருடன் சென்ற பிஞ்சு குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தாயார் மனந்திறந்துள்ளார்.
வான்கூவர் நகரில் செவ்வாய்க்கிழமை மாலை நேரம் நடந்த சாலை விபத்தில், நடைபாதையில் குழந்தையுடன் சென்றவர் மீது வாகனம் ஒன்று மோதியது. இதில் பிறந்து 23 மாதங்களேயான Ocean Oshi Noelle என்ற குழந்தை சம்பவயிடத்திலேயே மரணமடைந்தது.
அதன் தந்தை 31 வயதான Michael H, காயங்களுடன் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், Ford Escape கார் ஒன்று McLaren sports கார் மீது மோதியதில், ஒரு கார் மோதலின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டு, பாதசாரி மீது தாக்கியுள்ளது.
இந்த சம்பவத்திலேயே Michael H தமது குழந்தையுடன் துரதிர்ஷ்டவசமாக சிக்கியுள்ளார். குழந்தையின் தாயாரான Star J இந்த விபத்து நடக்கும் போது தான் பணி முடித்து குடியிருப்புக்கு அந்த வழியாக திரும்பியுள்ளார்.
பாதசாரிகளுக்கு ஏன் சாலையோரத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படவில்லை என அப்போது அவர் நினைத்துக் கொண்டதாகவும், அப்படி அமைக்கப்பட்டிருந்தால், வாகனம் பாதராசிகள் மீது மோத வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என்றும் அவர் எண்ணியுள்ளார்.
ஆனால் அந்த விபத்தில் சிக்கியது தமது கணவரும் குழந்தையும் என்பது அவருக்கு பின்னரே தெரிய வந்துள்ளது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் 29 வயதான Ford Escape கார் சாரதியை வான்கூவர் பொலிசார் கைது செய்துள்ளனர்.