உண்மை வெளிவர வேண்டும்: பால்கனி விபத்து குறித்து லண்டன் சிறுமியின் பெற்றோர் உருக்கம்
ஒன்ராறியோவின் லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த சிறுமி தொடர்பில் அவரது பெற்றோர் உருக்கமான கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
லண்டனில் கடந்த வாரம் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி ஒன்றில் இருந்து சிறுமி இனயா தவறி விழுந்து, காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
தற்போது, தொடர்புடைய அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியை அங்கு வசிப்பவர்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, சிறுமியின் விபத்து தொடர்பில் விசாரணை ஒருபக்கம் முன்னேறி வரும் நிலையில், தங்களுக்கு உண்மையான காரணம் தெரிய வேண்டும் எனவும், நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் சிறுமி இனயாவின் பெற்றோர்கள்.
தங்கள் குடியிருப்பின் பால்கனியில் இரு பக்கமும் பெரிய இடைவெளி இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், தங்கள் பிள்ளையின் இழப்பு தொடர்பில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இத்தனை பெரிய இடைவெளியுடன் கூடிய பால்கனி கொண்ட குடியிருப்பு தங்களுக்கு கிடைத்துள்ளது துரதிர்ஷ்டம் தான் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 1ம் திகதியில் இருந்தே குறித்த குடியிருப்புக்கு இனயா குடும்பம் இடம்பெயர்ந்துள்ளது. மேலும், கடந்த 2016ல் இருந்தே அந்த குடியிருப்பில் எவரும் வசித்ததில்லை என்றே கூறப்படுகிறது.
பால்கனியின் இருபக்கமும் இடைவெளி இருப்பதை தாங்கள் அறிந்திருந்ததாகவும், ஆனால் அது தொடர்பில் புகார் அளிக்க விரும்பவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி தங்களால் இயன்ற அளவிற்கு அந்த இடைவெளியை மூடி வைத்திருந்ததாகவும் இனயாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், குடியிருப்புகளின் பாதுகாப்பு தொடர்பிலும் அதிகாரிகளை விவாதிக்க வைத்துள்ளது.