ஒன்ராறியோவில் அடுக்குமாடி குடியிருப்பில் கோர சம்பவம்: வெளியான முதல் புகைப்படம்
ஒன்ராறியோவின் லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பின் 19வது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்து இறந்த குழந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
லண்டலில் லைல் தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 19வது மாடி பால்கனியில் இருந்தே 22 மாதங்களேயான சிறுமி இனயா தவறி விழுந்துள்ளார்.
சனிக்கிழமை மதியத்திற்கு மேல் நடந்த இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே, காயங்கள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள சிறுமி இனயா புகைப்படம் குடும்பத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய குடும்பம் என்பதால், பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் திட்டமும் அவர்களது குடும்ப நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை நண்பகல் வரையில் 15,000 டொலர் தொகையை எட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே, சிறுமி இனயா தவறி விழுந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம், அடுத்து ஒரு அறிவிப்பு வெளியாகும் வரையில் பால்கனியை யாரும் பயன்படுத்த வேண்டாம் என அறிக்கை ஒன்றின் வாயிலாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வேறு பகுதிக்கு குடியமர்த்தும் நடவடிக்கையும் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 2ம் திகதி நடந்த இச்சம்பவத்தை அடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தை மீட்கப்பட்ட பகுதியில் திங்களன்று பூக்கள், பொம்மைகள் என வைத்து அப்பகுதி மக்கள் நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.
குழந்தையின் மரணம் கண்டிப்பாக அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்பவர்களுக்கு சிறு மாற்றத்தையேனும் ஏற்படுத்தும் என, நீண்ட காலமாக குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் ஒருவர் தெரிவித்துள்ளார்.