கனடாவின் நீச்சல் தடாகம் ஒன்றில் ஏற்பட்ட விபரீதம்; 5 பேர் வைத்தியசாலையில்
கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகமொன்றின் நீரில் அதிகளவு க்ளோரின் சேர்க்கப்பட்டதனால் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்த் யோர்க்கில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையமொன்றின் நீச்சல் தடாகமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யோங் மற்றும் ஷெபர்ட் வீதிகளுக்கு அருகாமையில் உள்ள நீச்சல் தாடகத்தில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக தொலைபேசி மூலம் தீயனைப்புப் படையினருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயனைப்புப் படையினர் விரைந்துள்ளனர். நீச்சல் தடாகத்தில் மித மிஞ்சிய அளவில் க்ளோரின் போடப்பட்டதனால் இவ்வாறு சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து பேரில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு உயிர் ஆபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் சிறுவர்கள் இருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீச்சல் தடாகத்தில் அதிகளவு செறிவுடன் க்ளோரின் கலக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.