கனடாவில் சாக்லேட் விலைகளில் ஏற்படக்கூடிய மாற்றம்
எதிர்வரும் ஈஸ்டர் பண்டிகையில் சாக்லேட் விலைகளில் உயர்வை பதிவு செய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கோகோ விலை தொடர்ந்து உயர்வாகவே உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கோகோ பயிர்கள் வளர்த்த முக்கிய நாடுகளில் கடும் வானிலை காரணமாக கோகோ பயிர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே கோகோ விலை அதிகரித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு, சர்வதேச சந்தையில் கோகோ விலை டன் ஒன்றுக்கு 12,000 அமெரிக்க டாலரை கடந்தது. தற்போது விலை சுமார் 8,000டொலர்களாக காணப்படுகின்றது.
கடந்த 2022ல் 2,000 டொலர்களாக மட்டுமே இருந்ததை நினைவில் வைத்தால், இது பெரும் உயர்வாகவே பார்க்கப்படுகிறது.
சாக்லேட் தயாரிப்பாளர்களுக்கு விலையை உயர்த்துவது தவிர வழியில்லை என்றும், தரத்தை குறைக்க முடியாது என்றும் Vancouver-ஐ தலைமையிடமாக கொண்ட Daniel Chocolates நிறுவன உரிமையாளர் டேனியல் பான்ஸ்லெட் தெரிவித்தார்.
“சாக்லேட்டின் உற்பத்திச்செலவு மூன்று மடங்கு அதிகரித்திருக்கும் போது, பழைய விலையை வைத்தே விற்பது சாத்தியமே இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், ஈஸ்டர் பன்னி (Easter bunny) சாக்லேட்டின் விலை இரட்டிப்பாகியுள்ளதாகவும் பான்ஸ்லெட் தெரிவித்துள்ளார்.
கனடாவின் புள்ளிவிவரத் தரவுகளின்படி, கடந்த மார்ச்சில் சர்க்கரை மற்றும் இனிப்பு பொருட்கள் 5.7% வரை விலை உயர்ந்துள்ளன, இது மொத்த விலை உயர்வை விட அதிகமாகும்.
காலநிலை மாற்றம் காரணமாக கோகோ விவசாயிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
வெப்பம், மழை மற்றும் கடுமையான வானிலை காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட, சில விவசாயிகள் கோகோ பயிர்களை விட்டு வேறு பயிர்களுக்கே மாறி வருகின்றனர். இதுவும் விலை அதிகரிக்க காரணமாக உள்ளது.