உக்ரைனில் காலரா பரவும் அபாயம்.... ஆயிரக்கணக்கானோர் உயிருக்கு ஆபத்து
தெற்கு உக்ரேனிய நகரமான மரியுபோலில் காலரா மற்றும் பிற கொடிய நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
ரஷ்ய துருப்புகளால் பலிவாங்கப்பட்ட அப்பாவி உக்ரைன் மக்களின் சடலங்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில், இந்த ஆபத்து எழுந்துள்ளதாக மரியுபோல் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
மேலும், சடலங்களை உரிய முறைப்படி புதைக்காததால் உக்ரைனில் உள்ள கிணறுகள் மொத்தமாக மாசடைந்துள்ளதாகவும், கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் சடலங்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், இந்த இக்கட்டான நிலைக்கு நகரம் தள்ளப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார்.
மேலும், வயிற்றுப்போக்கு மற்றும் காலரா பரவல் ஏற்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இது எங்கள் மருத்துவர்களின் மதிப்பீடு என குறிப்பிட்டுள்ள நகர மேயர், இதுவரை மரியுபோல் நகரம் 20,000 குடியிருப்பாளர்களை போருக்கு இழந்துள்ளது என்றார்.
மேலும், தற்போதைய காலரா பரவல் இன்னும் ஆயிரக்கணக்கான மக்களை காவுவாங்கும் என்றே அஞ்சுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போருக்கு முன்னர் 430,000 மக்கள் குடியிருந்து வந்த மரியுபோல் நகரில் தற்போது 100,000 மக்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒன்றிணைந்து, எஞ்சிய மக்கள் நகரத்தை விட்டு வெளியேற உதவும் வகையில் மனிதாபிமான வழித்தடத்தை அமைப்பதில் பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.