தேவாலயத்தில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு: சிக்கிய துப்பாக்கிதாரி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தேவாலயத்தில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வழிபாட்டில் பங்கேற்ற மக்களே சுற்றிவளைத்து சிக்கவைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தெற்கு கலிபோர்னியா தேவாலயம் ஒன்றில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. தேவாலயத்தில் திடீரென்று புகுந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐந்து மூத்த குடிமக்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். இந்த நிலையிலேயே ஆராதனையில் பங்கேற்ற மக்கள், குறித்த துப்பாக்கிதாரியை சுற்றிவளைத்து மடக்கிப்பிடித்துள்ளனர்.
துப்பாக்கி குண்டு காயங்களுடன் தப்பிய ஐந்து பேர்களில் நால்வர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கைதான நபர் ஆசிய நாட்டவர் எனவும் 60 வயது கடந்தவர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் துப்பாக்கிதாரி அப்பகுதியில் வசிப்பவர் என்று விசாரணை அதிகாரிகள் நம்பவில்லை என்றே கூறப்படுகிறது.
சமயோசிதமாக மக்கள் எடுத்த துணிச்சலான முடிவால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.