200 சிம்பன்சிகளிடையே வெடித்த உள்நாட்டுப் போர் ; இதுதான் காரணம்
உகாண்டாவின் கிபாலே தேசியப் பூங்காவில் சுமார் 200 சிம்பன்சிகளைக் கொண்ட 'நகோகோ' என்ற பிரம்மாண்டக் குழுவில் தற்போது பயங்கரமான "உள்நாட்டுப் போர்" நடைபெற்று வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இந்தச் சமூகம், தற்போது 'மத்திய குழு' மற்றும் 'மேற்கு குழு' என இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளன.

வன்முறை
சுமார் 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய இத்தகைய அரிதான பிளவு, 2015ஆம் ஆண்டு முதல் சமூக ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் வெளிப்படத் தொடங்கியது.
2018 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில், இரு குழுக்களுக்கும் இடையே கொடிய வன்முறை வெடித்தது. இதில் மத்தியக் குழுவைச் சேர்ந்த 7 ஆண் சிம்பன்சிகளையும், 17 குட்டிகளையும் மேற்கு குழுவைச் சேர்ந்த வயதான சிம்பன்சிகள் கொடூரமாகக் கொன்றுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் நேரில் கண்டு ஆவணப்படுத்தியுள்ளனர்.
மேலும், 14 ஆண் குரங்குகள் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளன.
உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்கான போட்டி, தலைவர்களின் இறப்பு போன்ற காரணங்களால் இந்த விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆரோன் சாண்டல் தலைமையிலான குழு 'சயின்ஸ்' (Science) இதழில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.