தண்ணீருக்காக வெடித்த மோதல் ; 42 பேர் பலி ; தீவிரமடையும் நிலவரம்
மத்திய ஆபிரிக்காவின் சாட் நாட்டின் கிழக்கு பகுதியில் வடிஃபிரா மாகாணத்தில் உள்ள ஐகொடி கிராமத்தில் சமீப நாட்களாக இடம்பெற்று வரும் தண்ணீர் பிரச்சினை மற்றும் அதனால் ஏற்பட்ட மோதல்களில் சிக்கி 42 பேர் இதுவரை உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை காரணமாக இரு தரப்பினரிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், இந்த மோதல் அண்டை கிராமங்களுக்கும் பரவியுள்ளது.

பலர் படுகாயம்
இந்த மோதலின்போது இரு தரப்பினரும் துப்பாக்கி முதலான பயங்கர ஆயுதங்களை பிரயோகித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இதுவரை மொத்தமாக 42 பேர் உயிரிழந்ததோடு 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பலரது வீடுகள் தீ வைக்கப்பட்டன. இந்த மோதல் மற்றும் இதன் மோசமான விளைவுகள், உயிரிழப்புகளை சுட்டிக்காட்டி இரு தரப்பினரிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாட் நாட்டின் பல இடங்களில் தண்ணீர் பிரச்சினை மட்டுமன்றி, இன, மதக் குழுக்களுக்கிடையிலான மத மற்றும் நிலப் பிரச்சினைகள், கால்நடைகளை மேய்ப்பதில் எழக்கூடிய பிரச்சினைகள் என வன்முறைகளை தூண்டக்கூடிய பல பிரச்சினைகள் அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.