தாய்மண் விளையாட்டு கழகத்தின் 10 வது வெற்றி கிண்ணத்தை சுவீகரித்தது மொன்றியல் நியூ ஸ்டார்ஸ் விளையாட்டு கழகம்
கடந்த சனிக்கிழமை 08.21.2021 டொரோண்டோவில் தாய்மண் விளையாட்டு கழகம் நடாத்திய 10 வது கரப்பந்தாட்ட போட்டி மிகவும் கோலாகலமாக கொவிட் 19 விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்று முடிந்தது.
காலை 11 மணி முதல் இரவு 10 மணிவரை நடைபெற்ற இந்த மாபெரும் சுற்று போட்டியில் டொரோண்டோ, மொன்றியால் , பிராம்டன் , மிசிசாகா , மார்க்கம் நகரங்களில் இருந்து மொத்தமாக 18 அணிகள் பங்கு பற்றியிருந்தன.
மிகவும் விறுவிறுப்பாக நாடைபெற்ற சுற்று போட்டியின் இறுதி போட்டியில் மொன்றியால் நியூ ஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து டொரோண்டோ பிளெமிங்கிடன் விளையாடினர்.
இந்தப்போட்டியில் நியூ ஸ்டார்ஸ் அணி வெற்றிபெற்று கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர். ஒண்டாரியோ பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் தணிகாசலம் மற்றும் பிராம்டன் நகர பிதா திரு. பற்றிக் பிரவுன் அவர்களும் கலந்து சிறப்பித்து வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி கவுரவித்தனர்.
போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற அணியினருக்கு தங்க பதங்கங்களும் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்படடவர்களுக்கும் தங்கப்பதக்கம் அணிவித்து தாய்மண் விளையாட்டு கழகத்தினர் சிறப்பித்தனர் .
தாய்மண் விளையாட்டு கழகத்தினர் மற்றும் தலைவர் மகிந்தன் தலைமையில் மத்திய போசனமும் இரவு விருந்தும் சிறப்பாக ஏற்பாடு செய்து வந்திருந்த விளையாட்டு வீரர்களையும் பார்வையாளர்களையும் உபசரித்தனர்.
நாள் முழுவதும் தாயக பாடல்கள் ஒலிபரப்பபட்டது மட்டுமல்லாது தாயக வடிவிலான வெற்றி கிண்ணமும் வழங்கி சுற்று போட்டி இனிதே நிறைவு பெற்றது.



