கொழும்பில் திருடப்பட்ட பெண்ணிடமே நகைகளை திருப்பிக் கொடுத்த திருடன்!
வெள்ளவத்தையில் பெண் ஒருவரிடம் இருந்து பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்ட நபர், கொள்ளையிட்ட அனைத்தையும் குறித்த பெண்ணிடமே மீள கையளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் தினமும் மோட்டார் சைக்கிளில் தொழிலுச் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரமும் வழமையைப்போன்று குறித்த பெண் தொழிலுக்கு சென்று இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, அப்பெண்ணை வழிமறித்த ஒருவர் தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தன்மை பொலிஸ் உத்தியோக்கதர் என்று கூறி நபர், அப்பெண்ணை மிரட்டி அவர் செல்லும் வழியில் அவரை பின் தொடருமாறு கூறியுள்ளார். குறித்த நபர் கூறியபடியே அவரை அப்பெண் பின் தொடர்ந்துள்ளார்.
சிறிது தூரம் சென்ற பின்னர் ஆள் நடமாட்டம் அற்ற பிரதேசம் ஒன்றில் வைத்து குறித்த பெண்ணிடமிருந்த பணம், தங்க ஆபரணங்கள் போன்றவற்றை அந்நபர் பறித்துச் செல்ல முற்பட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த நபரிடம் குறித்த பெண் தான் 3 பிள்ளைகளின் தாய் என்பதோடு, கணவன் இன்றி பிள்ளைகளுடன் தனியாகவே வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கணவன் இல்லாததால் குடும்ப பொறுப்பு முழுவதையும் தானே சுமப்பதாகவும் மிகுந்த அசௌகரியங்களுக்கு மத்தியில் தனது மூன்று பிள்ளைகளையும் வளர்ப்பதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரின் பின்னணியை கேட்ட அந்த திருடன் அவரிடம் பறித்த அனைத்து பொருட்களையும் அவரிடமே மீள கையளித்துள்ளதோடு மாத்திரமின்றி, அவரை பாதுகாப்பாக பிரதான வீதி வரை அழைத்தும் வந்துள்ளார்.
சிறு வயது முதல் சுகபோகமாக வாழ்ந்து, வாழ்வில் உளவியல் ரீதியாகவோ பௌதீக ரீதியாகவோ எவ்வித பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்காமல், இன்று நல்ல நிலையில் ஆடம்பர வாழ்க்கை வாழும் நபர்கள் கூட தமது சுய நலத்துக்காக தவறிழைக்காதவர்களைக் கூட பழிவாங்கும் இந்தக் காலத்தில், திருடன் ஒருவனிடம் இந்த மனிதாபிமானம் வெளிப்பட்டுள்ளமை ஆச்சரியமளிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.