தூக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு நிறுவனம் அளித்த அதிர்ச்சி வைத்தியம்
அமெரிக்காவின் மிசிசிப்பி பகுதியை சேர்ந்த மரச்சாமான்கள் நிறுவனம் ஒன்று தங்களது ஊழியர்களில் 2,700 பேர்களை வெறும் குறுந்தகவல் மூலம் வேலையைவிட்டு நீக்கியுள்ளது.
அமெரிக்காவில் பிரபலமான Thanksgiving கொண்டாட்டத்தின் முந்தைய நாள் இந்த அதிர்ச்சி வைத்தியத்தை தொடர்புடைய நிறுவனம் ஊழியர்களுக்கு அளித்துள்ளது. நவம்பர் 21ம் திகதி நள்ளிரவு, ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு, பெரும்பாலானோர் அப்போது தூக்கத்தில் இருந்துள்ளனர், குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.
அதில், வேலையைவிட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும், இனி நிறுவனத்திற்குள் அனுமதிப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது இக்கட்டான சூழலில் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கும் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளதில் வருத்தம் இருப்பதாகவும் அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இதுவரை பெற்றுவந்தப் அனைத்து சலுகைகளும் இத்துடன் ரத்து செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக வேலையை விட்டு நீக்கப்படும் ஊழியர்களுக்கு, அவர்களுக்கான மருத்துவ காப்பீடு தக்கவைத்துக் கொள்ளலாம், தொடர்புடைய நிறுவனமே தவணைகளை செலுத்தும் விதி உள்ளது.
இதன்பொருட்டே, சலுகைகளை ரத்து செய்வதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், சாரதியாக பணியாற்றுபவர்கள் உடனடியாக நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும், தங்களிடம் இருக்கும் ஆவணங்களை ஒப்படைக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நள்ளிரவில், தூக்கத்தினிடையே கிடைத்த இந்த அதிர்ச்சி தகவலால் பல ஊழியர்கள் செய்வதறியாது ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.