டொராண்டோவில் பாரிய போதைப் பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு
டொராண்டோ பெரும்பாகும் மற்றும் கியூபெக் பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெரும் கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
18 மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பிறகு, டொராண்டோ பகுதியைச் சேர்ந்த மூவர் உட்பட மொத்தம் 6 பேர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஹாமில்டன் மற்றும் நயாகரா பகுதிகளில் உள்ள பொலிஸார் ‘தீவிர மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு’ இந்த விசாரணையைத் தொடங்கினர்.
பணமோசடி மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலை மையமாகக் கொண்டு, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களின் பல்வேறு காவல் துறைகளின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் போது 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பிடி விராந்துகள் பிறப்பிக்கப்பட்டு, சுமார் 4.4 மில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
153 கிலோ கிராம் கொக்கைன், 10 கிலோ கிராம் ஹெராயின், அரை கிலோ கிராம் கெட்டமைன், 1.6 மில்லியன் டொலர் ரொக்கப் பணம், ஒரு தடைசெய்யப்பட்ட துப்பாக்கி மற்றும் ஒரு வாகனம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
பனகியோடிஸ் செலியோடிஸ் (52) – கியூபெக், வலேரியா மாசாஸ்-மொன்டானோ (32) – டொராண்டோ, குவோக் நுயென் (38) – டொராண்டோ, ராபர்ட் பின்சோனால்ட் (36) – மாண்ட்ரியல், ஆஸ்டின் லே (30) – மிசிசாகா, யுங் சியுங் (48) – கியூபெக் ஆகியே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தலைமறைவாக உள்ள மற்றுமொரு நபரைத் தேடி பொலிஸார் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சட்டவிரோத போதைப்பொருள் மூலம் லாபம் ஈட்ட நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு இந்த விசாரணை ஒரு தெளிவான எச்சரிக்கை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.