சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் வேகமெடுக்கும் கொரோனா! 90 லட்சம் மக்களை முடக்கிய அரசங்கம்
சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது நிலையில் அங்கு பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரே ஒரு நோயாளி கண்டறியப்பட்டாலும் சீன அரசு, உடனடியாக தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் தனிமை முகாம்களுக்கு அனுப்பி கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியது .
சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒமைக்கரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் சீனாவில் கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 5,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளதனால் சீனா கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
குறிப்பாக ஜிலின் மாகாணத்தில் ஒமைக்ரான் மாறுபாடு வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தற்போதைய தொற்று எண்ணிக்கையில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக ஜிலினில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து ஜிலினில், அண்டை மகாணமான லியோனிங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இங்குள்ள ஷென்யாங் நகரம் கடும் பாதிப்பை சந்தித்து வருவதால் அங்கு நேற்று திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
சுமார் 90 லட்சம் மக்கள் வசிக்கும் தொழில் நகரமான ஷென்யாங் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதோடு பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார் தொழிற்சாலைகளும் இந்த நகரில் அமைந்துள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இன்று 4,770 புதிய கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை ஷாங்காய் நகரில் 865 அறிகுறியற்ற கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது தொடர்ந்து ஐந்தாவது நாளாக சாதனை அதிகரிப்பு என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.