தென்கொரியாவில் வேகமெடுக்கும் கொரோனா; ஒரே நாளில் இவ்வளவு பேரா?
தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 35 ஆயிரத்து 479 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன.
கடந்த சில மாதங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்புகள், கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து, ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது.
இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலைக்கு காரணமாகி உள்ளது. இந்த சூழலில் தென்கொரியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த வாரத்தில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்த நிலையில், அதன் பின்னர் பாதிப்பு சற்று குறைந்தது. இந்த நிலையில் தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 35 ஆயிரத்து 479 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1.14 கோடியை தாண்டியது. அதன்படி அங்கு இதுவரையில் 1 கோடியே 14 லட்சத்து 97 ஆயிரத்து 711 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் அதே போல் 24 மணி நேரத்தில் 323 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்ததை தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 14 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.