கனேடிய மாகாணம் ஒன்றில் அபாய கட்டத்தில் 12 பள்ளிகள்
ஆல்பர்ட்டா மாகாணத்தில் மொத்தம் 12 பள்ளிகளில் கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 28ம் திகதி வரையான தரவுகளின் அடிப்படையில் எட்மண்டனில் உள்ள அரசு பள்ளிகளில் மொத்தம் 573 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் குறித்த எண்ணிக்கையானது மாணவர்களின் பெற்றோர்கள் சுயமாக தெரிவித்துள்ளவை என்றே கூறப்படுகிறது. ஆல்பர்ட்டா மாகாண சுகாதாரத்துறைக்கு இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
தொடர்புடைய பள்ளிகளில் இருந்தும் கொரோனா பரவல் தொடர்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனால் வெளியாகியுள்ள எண்ணிக்கை துல்லியமாக இல்லை என்றே சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு இதேவேளை எட்மண்டனில் உள்ள அரசு பள்ளிகளில் மொத்தம் 68 பேர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
தற்போது 12 பள்ளிகள் கொரோனா பரவலின் அபாய கட்டத்தில் இருப்பதாகவும், 165 பள்ளிகளில் மொத்தம் 573 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் எழுபது சதவிகிதம் மழலையர் பள்ளி முதல் 6ம் வகுப்பு வரையில் உள்ளன.
மட்டுமின்றி, 12 வயதிற்குட்பட்ட மற்றும் இன்னும் தடுப்பூசி போட முடியாத குழந்தைகளும் இதில் சிக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.