கனேடிய மாகாணமொன்றில் கொரோனாவுக்கு 18 பேர் பலி
கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த வாரம் 2,239 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன், 18 பேர் உயிரிழந்தும் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வெள்ளிக்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை மட்டுமே 876 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை 657 பேரும், ஞாயிற்றுக்கிழமையிலிருந்து திங்கட்கிழமை வரை 706 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 303 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், 141 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார்கள்.
இதற்கிடையில், தடுப்பூசி பெறாதவர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.