கொரோனா தீவிரம்; மொரீஸியஸில் கடும் கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம்
மொரீஸியஸில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு இரு வார காலத்திற்கு பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 5 முதல் தற்போதுவரை புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பிரவீந்த் ஜுக்னாத் தொலைக்காட்சியில் உரையாற்றிய பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. துறைமுகம், விமான நிலையம், மருத்துவமனை சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் புதன்கிழமை முதல் செயல்படும் என்றும், பல்பொருள் அங்காடிகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் அகரவரிசை சுழற்சி அடிப்படையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கநிலையில் இருந்து விலக்கு பெற்றவர்களில் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள், அரசு மற்றும் நீதித்துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவ பராமரிப்புக்காக அல்லது அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நபர்கள் உள்ளனர்.
இதேவேளை விதிகளை மீறிய எந்தவொரு நபருக்கும் 500,000 மொரீஷிய ரூபாய் வரை அபராதமும், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.