சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பரவல்!
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தலைதூக்க்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது.
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 48 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இந்த ஆண்டு அதிகபட்சமாக கடந்த ஜனவரி 30 ஆம் திகதி 92 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. இதேவேளை அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை.
அந்த வகையில் 20 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 92,497 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் கொரோனாவால் இதுவரை சீனாவில் 4,636 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.