உறவினர்கள் அனைவருக்கும் கொரோனா: 3 மாத குழந்தைக்கு தாயாக மாறிய செவிலியர்
உறவினர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்று மாத குழந்தைக்கு செவிலியர் ஒருவர் தாயாக மாறியுள்ள நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் பகுதியைச் சார்ந்த தம்பதிக்கு 3 மாத குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கால் ஊருக்கு திரும்பியவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக பைன்சா என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் கார் ஓட்டுனராக பணியாற்றி வரும் மகேந்திரன் என்பவர், தம்பதியை கவனித்து வரும் நிலையில், 3 மாத குழந்தை பசியால் அழுது கொண்டிருந்துள்ளது.
அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் தனது மனைவியிடம் இந்த விஷயத்தை மகேந்திரன் கூறியுள்ளார். அவர் எந்தவிதமான பயமும் இல்லாமல், குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்று தாய்ப்பால் கொடுத்து பராமரித்து வந்துள்ளார்.
இதற்குள்ளாக திடீரென குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி குழந்தையை கவனித்து வருகிறார்.
தற்போது கொரோனாவில் இருந்து தம்பதி மீண்ட நிலையில், குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. செவிலியரின் தாயுள்ளம் கொண்ட செயலை கண்டு அப்பகுதி மக்கள் செவிலியர்களுக்கு மனதார பாராட்ட தெரிவித்துள்ளனர்.