கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் இருந்து பரவவில்லை: இயற்கையில் உருவானது! விஞ்ஞானிகள்
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவவில்லை. அது இயற்கையில் உருவானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு வகையான மரபணு மாற்றம் அடைந்து உருமாறிய கொரோனா வைரசாக இன்று வரை உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. இதன் தீவிரம் தற்போதும் குறையவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவின் போஸ்டன், மேரிலேண்ட், இங்கிலாந்தின் கிளாஸ்கோவ், தி வெல்கம் டிரஸ்ட், ஜெர்மனியின் பெர்லின் சாரிட்டி மருத்துவ பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் உள்பட உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வறிக்கை லேன்சட் மருத்துவ இதழில் வெளியானது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட சக சான்றுகளில் இருந்து கொரோனா வைரஸ் இயற்கையில் உருவானதாக கூறுப்படுவது நம்பத்தகுந்தது தான். அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லாமலே, சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வகை வைரஸ் எங்கிருந்து பரவியது என்று அனுமானத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் மீது குற்றம் சாட்டுவதால் எந்த பயனும் இல்லை.
நோய் கிருமி வவ்வாலில் இருந்து மனிதனுக்கு பரவியதா என்பதை அறிவதற்கான எந்த தகவலோ அல்லது மதிப்பாய்வுக்கோ இந்த குற்றச்சாட்டுகள் உதவுவதில்லை. புதிய வைரஸ்கள் உலகில் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் உருவாகலாம்.
கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள வேண்டுமென்றால், வீண் விவாதங்களை தவிர்த்துவிட்டு, வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதற்கான அறிவியல்பூர்வமான விசாரணைகளை தீவிரப்படுத்துவே சிறந்தது.
விஞ்ஞானிகள், உலக சுகாதார அமைப்பு இணைந்து சீனாவில் நடத்திய விசாரணையை மேலும் விரிவாக, துரிதமாக நடத்த வேண்டும். உலக சுகாதார அமைப்பு, கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கை விசாரணையின் ஆரம்பமே தவிர முடிவு அல்ல.
கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதை கண்டுபிடிக்க இன்னும் பல ஆண்டுகள், பல்வேறு ஆய்வுகள் நடத்தினால் மட்டுமே ஒரு முடிவுக்கு வர முடியும். அதற்கான முயற்சியில்தான், உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.