இத்தாலியில் கண்டறியப்பட்ட புதிய உருமாற்றம் கண்ட கொரோனா வைரஸ்!
ஐரோப்பிய நாடுகளில் இதுவரை அடையாளம் காணப்படாத புதிய உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றை இத்தாலியில் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகின்றது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் பட்டியலில் இத்தாலி தற்போது 8-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 902 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்து 81 ஆயிரத்து 368 ஆக உள்ளது. அத்துடன் அங்கு ஒரே நாளில் 318 பேர் மரணமடைந்துள்ள நிலையில், அங்கு கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 103 என தெரிய வந்துள்ளது.
ஏறக்குறைய 30,000 இறப்புகளுடன், நாட்டின் வடக்கில் பொருளாதார ரீதியாக வலுவான லோம்பார்டி நகரம் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கண்டறியப்படாத தாய்லாந்தில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றை இத்தாலியில் கண்டறிந்துள்ளனர்.
எகிப்தில் இருந்து இத்தாலிக்கு திரும்பிய நபரிடமே குறித்த தாய்லாந்தில் உருமாற்றம் கண்ட தொற்றானது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இது தொடர்பிலான ஆய்வில் இத்தாலிய சுகாதார அமைப்புகள் முனைப்பு காட்டி வருகின்றன.
இதேவேளை சுவிட்சர்லாந்தின் டிசினோ மண்டலத்தில் இருந்து 15 கி.மீற்றர் தொலைவிலேயே புதிய உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.