பிரபல கனடா மொடலின் பரிதாப நிலை... அவரே வெளிப்படையாக சொன்ன காரணம்
கனடாவின் பிரபல மொடல் Linda Evangelista தமது தற்போதைய நிலைக்கு என்ன காரணம் எனவும், மொடலிங் துறையில் இருந்து விலகி இருப்பதற்கும் விளக்கமளித்துள்ளார்.
அறுவை சிகிச்சையற்ற ஒப்பனைக்கான சில முன்னெடுப்புகளே தமது தற்போதைய நிலைக்கு காரணம் என Linda Evangelista வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
1990களில் உச்சத்தில் இருந்த மொடல் Linda Evangelista கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பனை தொடர்பான சிகிச்சை ஒன்றை முன்னெடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் உடல் உருக்குலைந்ததாகவும், தாம் மேற்கொண்ட சிகிச்சை உரிய பலனை அளிக்கவில்லை எனவும், மாறாக தமக்கு எதிர்வினையை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, அதில் இருந்து மீள தேவையற்ற, வலி மிகுந்த இரு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் அனைத்தும், தாம் உருமாறிப்போனதாக கூறியது.
உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவே அந்த சிகிச்சை மேற்கொண்டதாகவும் ஆனால் உரிய பலனை தரவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், சிகிச்சைக்குப் பின் வந்த ஆண்டுகளில் மிகவும் மனச்சோர்வடைந்து தனிமையில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது குறித்த நிறுவனத்திடம் இருந்து 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் Linda Evangelista தெரிவித்துள்ளார்.
இதுபோன்று வெளியுலகில் இருந்து விலகி இருப்பதை தாம் வெறுப்பதாக தெரிவித்துள்ள அவர், இனி மேலும் அவ்வாறான நிலை ஏற்படாது என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.