அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கடும் இரத்த உறைவு ; பயன்பாட்டை நிறுத்திய நாடுகள்
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பேரதிர்ச்சி! கடுமையான இரத்த உறைவு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்ற நான்கு நோயாளிகளுக்கு ஆபத்தான இரத்த உறைவு நிலைகள் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை ஆஸ்திரியாவின் தேசிய மருந்துகள் சீராக்கி நிறுத்தி வைத்துள்ளது.
இதேவேளை எஸ்டோனியா, லிதுவேனியா, லக்சம்பர்க், லாட்வியாபோன்ற ஏனைய நான்கு நாடுகளும் அதன் பயன்பாட்டை நிறுத்தி வைத்துள்ளன. ஆஸ்திரியாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளின் தொகுதி 49 வயதான ஒரு செவிலியரின் மரணத்திற்கு காரணம் என்று ஆரம்ப ஆய்வில் தெரியவந்துள்ளது என ஐரோப்பாவின் மருந்துகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போட்ட 10 நாட்களுக்குப் பிறகு இரத்த நாளங்களுக்குள் இரத்த உறைவு உருவாகிறது என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (ஈ.எம்.ஏ) தெரிவித்துள்ளது. எனினும் தடுப்பூசிதான் இந்த உறைதல் நிலைமைகளை ஏற்படுத்தியது என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்றும், தடுப்பூசியின் பக்க விளைவுகளாக த்ரோம்போசிஸ் பட்டியலிடப்படவில்லை என்றும் EMA கூறியது.
இதேவேளை, ஏபிவி 5300 என பெயரிடப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தொகுதியின் ஒரு மில்லியன் அளவுகள் 17 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.