தடுப்பூசிகளால் கொரோனா பரவலை தடுக்க இயலாவிட்டாலும்... நிபுணர்கள் தெரிவித்துள்ள தகவல்
தடுப்பூசிகளால் ஒரு வேளை கொரோனா பரவலை தடுக்க இயலாமல் போனாலும், அவை நோயாளிகள் அவசர சிகிச்சைப் பிரிவுகளைச் சென்றடைவதை நிச்சயம் தடுக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
அதாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கிடையே கூட கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்றாலும், அவற்றால் மக்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுகளைச் சென்றடைவதை தடுக்க முடியும் என்கிறார்கள் அவர்கள்.
அதனால், குறிப்பாக, மீண்டும் பொதுமுடக்கம் போன்ற அதீத கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலைமை உருவாவது தடுக்கப்படும் என்கிறார்கள் அவர்கள்.
சமீபத்தில், பைசர் தடுப்பூசியின் கொரோனா தொற்றைத் தடுக்கும் மற்றும் அறிகுறிகள் உருவாக்கும் திறன், ஜூன் 6இலிருந்து 64 சதவிகிதமாக குறைந்துள்ளது என்பதை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது.
ஆனாலும், அதே தடுப்பூசி கொரோனாவால் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதையும், நோயாளிகள் சீரியஸான நிலைக்கு செல்வதையும் 93 சதவிகிதம் குறைத்துள்ளதையும் மறுக்க இயலாது.
ஆகவே, சில கட்டுப்பாடுகளைம் சுய சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றுவது நல்லது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். ஏனென்றால், இஸ்ரேல் மாஸ்க் அணிவது கட்டாயம் என்னும் கட்டுப்பாட்டை விலக்கிக்கொண்டது. அதனால் கூட தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களிடையே மீண்டும் தொற்று அதிகரித்திருக்கலாம் என்கிறார்கள் அவர்கள்.
தடுப்பூசி என்பது மட்டுமே முழுமையான விடயம் அல்ல என்று கூறும் அவர்கள், அது அஸ்திபாரம் மட்டுமே, ஆகவே கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமானால், மற்ற கட்டுப்பாடுகள் நிச்சயம் தேவை என்கிறார்கள் அவர்கள்.