கனடாவில் தேவாலயம் சென்ற 40 பேர்களுக்கு பாதிப்பு... 11 பேர் மருத்துவமனையில்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்ட் பகுதி தேவாலயம் ஒன்றில் ஆராதனைக்கு சென்றவர்கள் 40 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிவந்துள்ளது.
இதில் 11 பேர்கள் நோய்ப்பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 18ம் திகதியில் இருந்தே, The Clearbrook Mennonite Brethren தேவாலயத்தில் ஆராதனைக்கு சென்றவர்கள் நோய் பாதிப்பு தொடர்பில் உரிய நிர்வாகத்தினருக்கு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அறிகுறிகள் தென்பட்டவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி, தேவாலய ஆராதனைகள் அனைத்தும் இணையமூடாக முன்னெடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சிலர் சோதனை செய்து கொள்ளவில்லை எனவும், ஆனால் அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவை பொறுத்தமட்டில், தற்போது தேவாலய நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. குறித்த தேவாலயத்தில் ஆராதனைக்கு சென்றவர்கள் பலருக்கும் லேசான அறிகுறிகளே கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவர் குடியிருப்புக்கு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு கண்டறியப்படுவதற்கும் முந்தைய ஞாயிற்றுக்கிழமை 180 முதல் 200 பேர்கள் ஆராதனைகளில் பங்கேற்றுள்ளனர்.
பெரும்பாலானோர் 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. இருப்பினும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மொத்தமும் பின்பற்றப்பட்டுள்ளதாகவே தேவாலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.