ஒன்று இரண்டு அல்ல... நான்கு டோஸ் தடுப்பூசிகள் வரை போடவேண்டிய கட்டாயத்தில் வெளிநாடு வாழ் கனேடியர்கள்
பெரும்பாலான கனேடியர்கள் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டதை கொண்டாடும் நிலையில், வேறு வழியில்லாமல், மூன்றாவது நான்காவது டோஸ் தடுப்பூசி கூட போடவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்கள் வெளிநாடு வாழ் கனேடியர்கள் சிலர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Monique Horvath (49) கனடாவைச் சேர்ந்த ஒரு ஆசிரியை. அவர் கடந்த 14 ஆண்டுகளாக ரஷ்யாவில் வாழ்கிறார், வேலை செய்கிறார்.
அவரும் அவரது கணவரும் ஏற்கனவே ரஷ்யாவில் இரண்டு டோஸ் Sputnik V தடுப்பூசி பெற்றுக்கொண்டாயிற்று. Sputnik V மட்டுமே ரஷ்யாவில் கிடைக்கும் நிலையில், அது கனடாவில் அங்கீகரிக்கப்படவில்லை.
ஆகவே, அவர்கள் கனடாவுக்கு திடீரென வர நேரிட்டால், அவர்கள் தடுப்பூசி போடவில்லை என்று கருதி ஹொட்டல் தனிமைப்படுத்துதலுக்கு ஆளாகவேண்டியிருக்கும்.
கனடாவில் வாழும் உறவினர்கள் யாராவது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டால், அவர்களைக் காண ரஷ்யாவிலிருந்து கனடாவுக்கு வந்தால், அவர்களை உடனே பார்க்க முடியாமல் 14 நாட்கள் வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டி வரும்.
ஆகவே, சென்ற மாதம் கனடாவுக்கு வந்த இருவரும், இரண்டு வார தனிமைப்படுத்துதலுக்குப் பின், மீண்டும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியாக மொடெர்னா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டு, ரஷ்யா திரும்பும் முன் அடுத்த டோஸ் மொடெர்னா தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டு செல்வதற்காக காத்திருக்கிறார்கள்.