இந்திய தயாரிப்பு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மூன்றாவது டோஸ்: கனேடிய மாகாணம் அழைப்பு
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பு மூன்றாவது டோஸ் பெற்றுக்கொள்ளலாம் என கியூபெக் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியானது ஐரோப்பிய நாடுகளில் ஏற்க மறுத்து வருவதால், கியூபெக் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
ஆனால் உரிய ஆலோசனை பெற்றுக்கொண்ட பின்னரே, மூன்றாவது டோஸ் போட்டுக்கொள்வது குறித்து மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்ற எச்சரிக்கையும் சுகாதார அதிகாரிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், மூன்றாவது டோஸ் தடுப்பூசியானது ஏற்கனவே போட்டுக்கொண்ட இரண்டு டோஸ்களுடன் ஒப்பிடும்போது அதிக பாதுகாப்பை வழங்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் தீவிர ஆலோசனைக்கு பின்னர் மூன்றாவது டோஸ் பெறுவது தொடர்பில் முடிவெடுத்தால் போதும் எனவும் அதிகாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.