கனடிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: இருவர் பலி, மூவர் காயம்!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், மிசிசாகா பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற கொடூர வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று காலை 9 மணிக்குப் பிறகு, டிக்ஸி வீதிக்கு அருகிலுள்ள கிழக்கு நோக்கிய விரைவுப் பாதைகளில்இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பின்னாலிருந்து வந்த வாகனம் ஒன்று மோதியதில், முன்னால் சென்ற வாகனத்தில் பயணித்த கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் மற்றும் 53 வயது பெண் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த மற்ற மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து மிசிசாகா பகுதியில் உள்ள விரைவுப் பாதைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மிசிசாகா வீதிக்கும் டிக்ஸி வீதிக்கும் இடைப்பட்ட விரைவுப் பாதைகளுக்குள் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
ஒரேயொரு கலெக்டர் பாதை மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளதால், வாகனங்கள் மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
மாலை 3 மணி வரை இந்த விரைவுப் பாதைகள் மூடப்பட்டிருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நடந்த பகுதியைத் தவிர்த்து, மாற்றுப் பாதைகளாக டெர்ரி வீதி, எக்லிண்டன் அவென்யூ அல்லது நெடுஞ்சாலை 407 ஆகியவற்றைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.