6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்ட கச்சா எண்னெய் விலை
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் கச்சா எண்ணெய் விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.
பெட்ரோலிய உற்பத்தி அளவு மற்றும் அதன் விலையை கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஒபேக் கூட்டமைப்பு நாடுகள் தீர்மானிக்கின்றன. கொரோனா காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தியில் இருந்த தேக்கத்திற்கு முடிவு கட்டி உற்பத்தியை அதிகரிக்க உறுப்பு நாடுகள் விருப்பம் தெரிவித்தன.
எனினும் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை 8 மாதங்களுக்கு பிறகு அதிகரிக்கலாம் என்று சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா யோசனை தெரிவித்த நிலையில் அதனை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்றுக்கொள்ளவில்லை. கச்சா எண்ணெய் உற்பத்திக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்துள்ள முதலீடுகளே இதற்கு காரணமாகும்.
இப்பிரச்சனையால் கடந்த வாரம் நடைபெற இருந்த ஒபேக் நாடுகள் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அபுதாபி இளவரசர் முகமது பின் சயித் இடையே தொழில், தூதரக உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் சவுதி அரேபியா தமது நாட்டில் தொழில் தொடங்குமாறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் போட்டி உருவாகிய துபாய் அபுதாபியின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஐக்கிய அரசு அமீரகம் கருதுகிறது.
மேலும் இஸ்ரேல் உடன் ஐக்கிய அரபு அமீரகம் தூதரக உறவை ஏற்படுத்தி கொண்டதும் சவுதி அரேபியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுபோன்ற மோதல் போக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி தேக்கமடைய காரணமாக கருதப்படுகிறது.