கனேடிய மாகாணம் ஒன்றில் மொத்தமாக 10,000 பேர்கள் பாதிப்பு: நீடிக்கும் சிக்கல்
கனடாவின் மனிடோபா மாகாணத்தில் பனிப்புயல் தொடர்பான சிக்கல்களால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 10,000 மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை பகலில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட பின்னரே மின்சார சேவை அனுமதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது.
மனிடோபாவின் Interlake மற்றும் Selkirk பகுதி மக்களே பெரும்பாலும் பாதிப்புக்கு உள்ளானதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து சீராகும் வரையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.
மின் கம்பங்கள் பதிக்கவும், அது தொடர்பான பணிகளுக்கும் தற்போதைய சூழலில் ஆட்களை திரட்டுவது காலதாமதத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
பனிப்பொழிவு காரணமாக தென்மேற்கு வின்னிபெக் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கே சுமார் 1,500 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், குறித்த பகுதியில் மீண்டும் எப்போது மின்சாரம் திரும்பும் என்பதில் காலக்கெடு விதிக்க முடியாத சூழல் எனவும் தொடர்புடைய நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பலர் கடும் அதிருப்தியில் இருப்பார்கள் என்பது தெரியும் என குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள், மனிடோபா ஹைட்ரோ இணையதளத்தை அணுகவும் வலியுறுத்தியுள்ளனர்.