தனக்குத் தானே கல்லறை கட்டிய மூதாட்டி உயிரிழப்பு
தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து, கடந்த 2016-ஆ ம் ஆண்டு தனக்கு சொந்தமான இடத்தில் கல்லறை கட்டி அதன் அருகில் வசித்துவந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
அந்த கல்லறை அருகிலேயே 2 அறைகள் கட்டி அதில் அந்த மூதாட்டி வசித்து வந்துள்ளார். தமிழகத்தின் நாகர்கோவில் கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் கொல்லன்விளை பகுதியை சேர்ந்தவர் ரோசி(வயது 70). திருமணமாகாத இவர் பல்லுகுழி பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
100 நாள் வேலை திட்டத்தில் பணிக்குச் சென்று வந்த இவரை, உறவினர் விஜயன் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில் ரோசி வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து அவரது வீட்டருகே வசிப்பவர்கள் விஜயனுக்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து விஜயன் அங்கு சென்று பார்த்த போது ரோசி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி தனது மனைவியோடு நலம் விசாரிக்க வந்தபோது ரோசி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறியதாகவும் விஜயன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இறந்து போன ரோசி, தனக்கு யாரும் இல்லை என்பதை மனதில் வைத்து, தனக்கு கல்லறை கட்டிய சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டிருந்தம்மை குறிப்பிடத்தக்கது.