தாயாக விரும்பாத பெண்கள்... மக்கள்தொகை நெருக்கடியில் ஒரு நாடு
பிள்ளைகளை வளர்ப்பதில் பல இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் காரணமாகவே, தென் கொரியாவில் பெரும்பாலான பெண்கள் தற்போது தாயாக விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், தம்பதிகள் தங்கள் எதிர்காலம் தொடர்பில் அதிகமாக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சியோல் பகுதியை சேர்ந்த யூ யங் என்பவரின் பாட்டி 6 பிள்ளைகளுக்கு தாயான நிலையில், யூவின் தாயார் இரண்டு பிள்ளைகளுடன் நிறுத்திக் கொண்டுள்ளார்.
ஆனால் யூ யங் தமக்கும் கணவருக்கும் பிள்ளைகள் மீது ஆசை இருந்தாலும், இழக்கவேண்டியவை அதிகம் என்பதால், பிள்ளை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான தென் கொரிய பெண்கள் யூ யங் போன்ற மன நிலையில் இருப்பதாகவும், திருமணம் செய்துகொள்ளவே மறுப்பதாகவும் கூறப்படுகிறது. 2021ல் முதன்முறையாக மக்கள்தொகை சரிவு அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், இது காலப்போக்கில் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்க காரணமாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகப்பேறு அதிகரிக்கும் வகையில் தென் கொரிய அரசாங்கம் கடந்த 16 ஆண்டுகளில் மட்டும் 210 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. மட்டுமின்றி, நாட்டில் கல்வி தொடர்பான கட்டமைப்புகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இதனால் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டிருந்தும், அதனால் உரிய பலனை பெறமுடியாமல் போனதாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
1996ல் மட்டும் தென் கொரியாவில் 430,000 திருமணங்கள் நடந்துள்ள நிலையில், 2021ல் வெறும் 193,000 திருமணங்கள் மட்டுமே நடந்துள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி, தென் கொரியாவில் கடந்த ஆண்டு 260,600 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் 1996ல் இந்த எண்ணிக்கையானது 691,200 என பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.