தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: வெளிநாட்டில் கைதான கனேடிய பாடகர்
சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்க வெளிநாட்டு படைகளுடன் கூட்டுச் சேர்ந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் கனேடிய பாடகர் உட்பட நால்வர் ஹொங்ஹொங்கில் கைதாகியுள்ளனர்.
பிரித்தானியாவை சேர்ந்த மனித உரிமைகள் குழு ஒன்று குறித்த தகவலை உறுதி செய்துள்ளதுடன், கனேடிய பாடகரும் சமூக ஆர்வலருமான Denise Ho கைதானவர்களில் ஒருவர் என்பதையும் தெரிவித்துள்ளது.
கார்டினல் ஜோசப் ஜென், சட்டத்தரணி மார்கரெட் எங் மற்றும் அறிஞர் ஹுய் போ-கியுங் ஆகியோருடன் பாடகர் ஹோவும் ஹொங்ஹொங்கின் தேசிய பாதுகாப்புப் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
2019 ஜனநாயக சார்பு போராட்டங்களில் பங்கேற்ற மக்களுக்கு சட்ட உதவி வழங்கிய 612 மனிதாபிமான நிவாரண நிதியத்தின் அறங்காவலர்களாக இவர்கள் பங்களிப்பு தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த பிரித்தானிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2020ல் சீனாவால் ஹொங்ஹொங் மீது திணிக்கப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஏராளமான ஜனநாயக-சார்பு ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடகர் ஹோ முன்பு கைது செய்யப்பட்டு டிசம்பரில் தடுத்து வைக்கப்பட்டார். இந்த கைது நடவடிக்கைகள் அனைத்தும் ஹொங்ஹொங்கில் மோசமான அடக்குமுறையின் அறிகுறி என பரவலாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.