ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு வெளிநாட்டவர்கள் தீயில் கருகி பலி: கனேடிய நகரம் ஒன்றில் சோக சம்பவம்
கனேடிய நகரம் ஒன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் தீவிபத்தொன்றில் உடல்கருகி பலியாகியுள்ளார்கள். கால்கரிக்கு கிழக்கே உள்ள Chestermere என்ற இடத்தில் வாழும் பாகிஸ்தானியரான அம்ஜத் கமல், தன் சகோதரரான ஆஸாத் கமல் குடும்பத்திற்கு தன் வீட்டில் விருந்தளித்துள்ளார்.
அனைவரும் உறங்கிக்கொண்டிருக்கும்போது, அதிகாலை 2.30 மணியளவில் திடீரென அந்த வீட்டில் தீப்பற்றியுள்ளது. தீயில் ஆஸாத் கமல் உட்பட ஏழு பேர் உயிரிழந்துவிட்டார்கள்.
அம்ஜத் கமல் நான்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்துவிட்டதால், அவரும் அந்த நான்கு குழந்தைகளும் தப்பிவிட்டார்கள். உயிரிழந்தவர்களில் 4 முதல் 12 வயதுடைய நான்கு குழந்தைகளும் அடக்கம்.
ஆஸாத் கமல், அவரது மனைவி, அம்ஜத் கமலின் மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளார்கள். அம்ஜத் கமலுக்கு ஐந்து பிள்ளைகள், ஆஸாத் கமலுக்கு மூன்று பிள்ளைகள், இதில் உயிரிழந்தது யார், உயிர் பிழைத்தது யார் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. முதலில், இஸ்லாமிய வெறுப்பு காரணமாக யாரேனும் வீட்டுக்கு தீவைத்திருக்கலாமா என்ற கோணத்தில் விசாரிக்க துவங்கிய பொலிசார், தற்போது வேண்டுமென்றே யாரும் தீவைத்ததாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்கள்.
தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் நினைவாக நேற்று பிரார்த்தனை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.