2.1 மில்லியன் காசா மக்களிற்கு பேரழிவு; சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவலை
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நீடிக்கும் நிலையில் காசா நகரை முழுவதும் கைப்பற்றும் நோக்கில் 60,,000 ரிசர்வ் வீரர்களை திரட்டுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
60,000 ரிசர்வ் வீரர்கள் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் சர்ச்சைக்குரிய நடவடிக்கையாக காசா நகரை முழுவதுமாக கைப்பற்றும் திட்டத்திற்காக சுமார் 60000 ரிசர்வ் வீரர்களை இஸ்ரேல் திரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு வரும் காசா மக்கள்
இது தொடர்பாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலில், புதிய திட்டத்திற்கான குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரிசர்வ் வீரர்கள் ஏற்கனவே பணியில் இருப்பதாகவும், மீதமுள்ள வீரர்கள் செப்டம்பர் மாதம் பணிக்கு திரும்புவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை காசா நகரை கட்டுப்பாட்டில் எடுக்கும் இஸ்ரேலின் இந்த திட்டத்திற்கு அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.
பாதுகாப்பு துறை அமைச்சர் அனுமதி வழங்கும் முன்னரே இதற்கான ஆயத்தப் பணிகள் ஜைதூன் மற்றும் ஜபலியா ஆகிய பகுதியில் தொடங்கிவிட்டன. இஸ்ரேலின் இராணுவ திட்டத்தை தொடர்ந்து, லட்சக்கணக்கான காசா நகர மக்கள் அவர்களது இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த இடப்பெயர்வு காசாவின் 2.1 மில்லியன் மக்களின் பேரழிவு சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் அபாயம் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது.