24 வகையான வவ்வால் கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிப்பு: அதிர்ச்சியில் சர்வதேச விஞ்ஞானிகள் குழு!
சீனாவில் கொரோனா வைரசின் தோற்றம் பற்றிய ஆய்வில், 24 வகையான வவ்வால் கொரோனா வைரசுகள் கண்டறியப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. விலங்கு சந்தை ஒன்றில் இருந்து இந்த வைரசானது தோன்றியிருக்க கூடும் என முதலில் கூறப்பட்டது.
எனினும், அதற்கு போதிய சான்றுகள் வழங்கப்படவில்லை. இதன்பின்னர் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கிளை பரப்ப தொடங்கின. இவற்றில் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா சிக்கி திணறி வருகிறது. அந்நாட்டில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு போட்டி போட்டு கொண்டு மற்ற நாடுகளை விட முன்னணியில் உள்ளன.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், கொரோனா வைரசின் பிறப்பிடம் சீனா என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார். உகான் வைராலஜி மையத்தில் இருந்து அவை தோன்றியுள்ளன என கூறினார். ஆனால், அதனை சீனா தொடர்ந்து மறுத்து வந்தது.
இதன்பின்னர் உலக சுகாதார அமைப்பு இந்த ஆண்டில் சீனாவுக்கு தனது நிபுணர் குழுவை அனுப்பி வைத்தது. அதில், சீனாவின் உகான் நகர ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவி இருப்பதற்கான சாத்தியம் இல்லை என நிபுணர்கள் தெரிவித்தனர். சீனாவில் வவ்வால் வைரசுகள் பற்றி பல சர்வதேச விஞ்ஞானிகளின் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அவற்றில் ஷான்டோங் மருத்துவ பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஷி வெய்போங் என்பவர் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், தென்மேற்கு சீனாவில் 4 கி.மீ. கொண்ட குறைந்த அளவு பகுதிக்குள் இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வவ்வால் கொரோனா வைரசுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவற்றில் 4 வைரசுகள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசுகளுடன் தொடர்புடையவை என தெரிய வந்துள்ளது.
அவற்றில் ஒரு வைரசானது கொரோனா வைரசின் மரபணுவை சுமந்திருந்தது. எனினும், பெருந்தொற்றாக உருவெடுத்துள்ள கொரோனா வைரசின் நேரடி முன்னோர்களாக அவை எதுவும் இல்லை. இந்த நெருங்கிய, ஒத்து போக கூடிய ஆர்.பி.ஒய்.என்.ஜீரோ.சிக்ஸ். (RpYN06) வைரசானது, கொரோனா வைரசின் மரபணுவுடன் 94.5 சதவீதம் ஒத்த தன்மையை கொண்டுள்ளது.
பல வருடங்களுக்கு முன் யுன்னானில் சேகரிக்கப்பட்ட ஆர்.ஏ.டி.ஜி.ஒன்.த்ரீ. (RaTG13) என்ற வைரசானது, கொரோனா வைரசுடன் 96 சதவீதம் ஒத்து போகிறது என ஷி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இதனால், கொரோனா வைரசின் முன்னோர்கள் இந்த RpYN06 மற்றும் RaTG13 வைரசுகளின் மரபுவழியில் இருந்து பல்வேறு தசாப்தங்களுக்கு முன்பே பிரிந்து, வெவ்வேறு வைரசினங்களுடன் கலந்து மறுஇணைப்பு நிகழ்வில் சென்றிருக்க கூடும் என ஷி மற்றும் அவரது ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
எனினும், ஒரு சிறிய பகுதியில் இதற்கு முன் அறியப்படாத பல வைரசினங்கள் கண்டறியப்பட்டு இருப்பது, கொரோனா வைரசின் தோற்றம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பிற வைரசுகளை பற்றி தீர்வு கண்டறிவதில் அதிக சிரமம் ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதேபோன்று ஷாங்காய் நகரை அடிப்படையாக கொண்ட விஞ்ஞானி ஒருவர் கொரோனா வைரசுகளின் வாழ்வியலை பற்றி ஆய்வு செய்ததில், வெப்ப மண்டல பகுதிகளில் இருந்து பல புதிய வைரசுகள் தோன்றியுள்ளன.
சூடான பருவநிலை மற்றும் கைவிடப்பட்ட விலங்கினங்கள் ஆகியவை, வெவ்வேறு வைரசுகள் போட்டி போட்டு ஒன்றிணைந்து புதிய வகை வைரசுகளை உருவாக்க அனுமதிக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.