கனேடிய மாகாணம் ஒன்றில் அடுத்த மாதம் பணியிடைநீக்கம் செய்யப்பட உள்ள 17,000 சுகாதாரத்துறை ஊழியர்கள்: காரணம்?
கனேடிய மாகாணமான கியூபெக்கில் சுமார் 17,000 சுகாதாரத்துறை ஊழியர்கள் அடுத்த மாதம் பணியிடைநீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
கியூபெக்கில் 17,642 சுகாதாரத்துறை ஊழியர்கள் இதுவரை தங்கள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என சுகாதாரத்துறை அமைச்சரின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் பாதிபேர் நேரடியாக நோயாளிகளை சந்திக்கும் பணியில் உள்ளவர்கள். கியூபெக்கில் அக்டோபர் 15ஆம் திகதி முதல் சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவர்களும், முதல் டோஸ் தடுப்பூசி மட்டுமே பெற்றுக்கொண்டுள்ளவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், ஏற்கனவே மருத்துவமனைகள் ஊழியர்கள் பற்றாக்குறையால் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், இத்தனை பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட உள்ளதால் மருத்துவமனைகளும் பாதிக்கப்பட உள்ளதை மறுப்பதற்கில்லை.
அதனால், அவர்களது வெற்றிடத்தை நிரப்புவதற்கான முயற்சியும் துவங்கியுள்ளது. பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர்களின் இடத்தில் பணியாற்றுவதற்காக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது எந்த அளவுக்கு பயணளிக்கும் என்பது தெரியவில்லை!