கர்ப்பிணி பெண்ணை ஸ்கேன் எடுக்க அலையவிட்ட மருத்துவர்கள்! இறுதியில் நேர்ந்த சோகம்
வயிற்றில் அசைவில்லாமல் வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் குமார் சித்ரா என்ற 9 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் ஸ்கேன் எடுக்க அரசு மருத்துவர்கள் அலைய விட்ட பரிதாபத்தால் குழந்தை இறந்து பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயிற்றில் குழந்தை அசைவற்ற தன்மையில் இருப்பதைக் உணர்ந்த சித்ரா தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் வைத்தியரிடம் சென்றுள்ளார்.
அவர் ஸ்கேன் எடுத்து பார்த்து விட்டு 99 சதவீதம் சந்தேகமாக உள்ளது, நீங்கள் உடனே அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறி கடிதம் வழங்கி உள்ளார். பரிந்துரை செய்யப்பட்ட கடிதத்துடன் சித்ரா காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் எமர்ஜென்சி என குறிப்பிட்டு இருந்தும் பிரசவ பிரிவில் உள்ள மருத்துவர்கள் சித்ராவுக்கு உடனே சிகிச்சை அளிக்காமல் தனியார் ஸ்கேன் நிலையத்திற்கு சென்று மீண்டும் ஸ்கேன் எடுத்துக்கொண்டு வரும்படி கூறியுள்ளனர்.
அங்கு சென்ற போது தனியார் ஸ்கேன் சென்டர் நிலையம் மூடிபட்டிருந்தது. மீண்டும் அங்கிருந்து சுமார் கால் கிலோ மீட்டர் தூரம் உள்ள மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களை சந்தித்து தனியார் ஸ்கேன் நிலையம் மூடப்பட்டுள்ளது என முறையிட்டுள்ளார். இவ்வாறு குறித்த 9 மாத கர்ப்பிணி பெண் அலையவிடப்பட்டுடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது என மருத்துவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும் அதை முறையாக தெரிவிக்காமல்,சித்ராவை ஸ்கேன் நிலையத்திற்கு அலையவிட்டுள்ளனர் என மருத்துவர்கள் மீது குறித்த பெண்ணின் உறவினர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.