நாய், குதிரைக்கு பென்ஷன் வழங்கவுள்ள நாடு; பலரும் ஆச்சர்யம்
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்காக பென்ஷன் வழங்க போலந்து அரசு திட்டம் மேற்கொண்டு வருகின்றமையானது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. வாழ்நாள் முழுவதும் வேலை செய்பவர்கள் பணி ஓய்வு காலங்களில் வருமானம் இன்றி தவிக்காமல் இருக்கப் பல நாட்டு அரசும், பென்ஷன் திட்டத்தை செயல்முறை படுத்தியுள்ளது.
மனிதர்கள் போல, நாய் குதிரை ஆகிய விலங்குகளும் அரசுப் பணியில் சேவை செய்து வருகின்றன. இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணி, வெடிகுண்டு அகற்றுதல், தேடுதல் பணி எனப் பல உதவிகளைக் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையில் இருக்கும் விலங்குகள் செய்கின்றன. இப்படி இக்கட்டான சூழ்நிலைகளில் பெரும் உதவி செய்யும் விலங்குகள், வயதான காலங்களில், அரசு வேலையிலிருந்து வெளியேறிய பிறகு அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகின்றன.
இந்நிலையில் இதனை எதிர்கொள்ள போலந்து அரசு புது திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளது. இது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. போலந்து நாட்டில், பணி ஓய்விற்குப் பின்னர், அரசாங்கத்தில் வேலை செய்த நாய்களும் குதிரைகளும் அரசு பாதுகாப்பிலிருந்து வெளியேறி புது எஜமானர்களைச் சென்று சேர்கிறது.
அங்கு அவைகளின் பராமரிப்பு செலவுகளை ஏற்க முடியாமல் எஜமானர்கள் திணறி வருகின்றனர். இதனைச் சரி செய்ய, போலந்து அரசு, பணி ஓய்வு பெற்ற நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு பென்ஷன் வழங்க மசோதா ஒன்றைத் தாக்கல் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதைக் குறித்து போலந்து உள்துறை அமைச்சகம் கூறுகையில், அரசு வேலை செய்யும் விலங்குகளால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன, மேலும் பல குற்றங்கள் கண்டறியப்படுகின்றன. ஆகையால் அந்த விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சட்டத்தை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சேவை காலங்களில் கடினமாக உழைக்கும் இந்த விலங்குகளுக்கு , ஓய்வு பெற்றபின் மருத்துவ பராமரிப்பு அதிகமாக தேவைப்படுவதனால் போலந்து அரசு இந்த திட்டத்தைச் செயல்முறைப் படுத்த தீவிர முயற்சி எடுத்து வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.