புடினுக்கு காலக்கெடு விதித்த ட்ரம்ப் ; விரைவில் சமாதான ஒப்பந்தம்
உக்ரைன் போர் அமைதி ஒப்பந்தத்தில், கையெழுத்திட புடினுக்கு இன்னும் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால் உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
ரஷ்யா மீது கடுமையான வரிகள்
சமீபத்தில், உக்ரைன் போரை 50 நாட்களில் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று ரஷ்யா போர் நிறுத்தத்தை எட்டுவதற்கு விதித்த 50 நாள் காலக்கெடு குறித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி இருப்பதாவது:
உக்ரைன் போர் அமைதி ஒப்பந்தத்தில், கையெழுத்திட புடினுக்கு இன்னும் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இல்லையெனில் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்.
உக்ரைன் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும், ரஷ்ய அதிபர் புடின் மீதான தனது விரக்தியை வெளிப்படுத்திய டிரம்ப், என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்திருந்தும் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று கூறினார்.
அதிபர் புடினால் நான் ஏமாற்றம் அடைந்து உள்ளேன். நான் அவருக்கு வழங்கிய 50 நாட்கள் கெடுவை குறைக்கப் போகிறேன். ஏனென்றால் என்ன நடக்கப் போகிறது என்பதற்கான பதில் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைக்கிறேன், என்றார்.