ஒஷாவாவில் கோர விபத்து: மரத்தில் கார் மோதி 40 வயது நபர் பலி
கனடாவின் ஒஷாவாவில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.
டர்ஹாம் பிராந்திய காவல்துறையினருக்கு விபத்து குறித்த தகவல் கிடைத்தது. பிளாக்ஹார்ன் தெருவின் கிழக்கே, அடிலெய்டு அவென்யூ ஈஸ்ட் (Adelaide Avenue East) பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்துக்குள்ளான நபர் டொயோட்டா காரில் அடிலெய்டு அவென்யூவின் மேற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக கார் சாலையை விட்டு விலகி அருகில் இருந்த ஒரு பெரிய மரத்தின் மீது மோதியதாகவும், மோதிய வேகத்தில் கார் நிக்காமல் முன்னோக்கிச் சென்று மற்றொரு மரத்தின் மீது பலமாக மோதி நின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து நடந்த இடத்திலிருந்து பெறப்பட்ட புகைப்படங்கள், கார் மிக மோசமாக சேதமடைந்து பக்கவாட்டில் சாய்ந்த நிலையில் ஒரு மரத்தோடு ஒட்டி நிற்பதைக் காட்டுகின்றன.
விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறையினரையோ அல்லது 'கிரைம் ஸ்டாப்பர்ஸ்' (Crime Stoppers) அமைப்பையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.