கீவ் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 116 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல்
கீவ் நகர் மீது இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 மாடி கட்டிடம், 25 இற்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் சேதம் அடைந்ததாக கீவ் நகர ராணுவ நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்துளளார்.
கீவ் மீது கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. ரஷியா - உக்ரைன் இடையிலான போர் 3 வருடங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ரஷியாவும் உக்ரைனும் நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. கீவ் நகரை தவிர்த்து தெற்கு துறைமுக நகரான ஒடேசா மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழக்க, 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கீவ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், மிகவும் மோசமான தாக்குதலில் ஒன்று என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியா 440 டிரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகள் மூலம் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியுள்ளது.