தன்னை தானே தேடிய நபர்: ஓர் சுவாரசிய சம்பவம்
துருக்கியில் காணாமல் போன நபரே, போலீஸாருடன் சேர்ந்து தன்னைத் தானே தேடிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “துருக்கியைச் சேர்ந்தவர் 50 வயதான முட்லு. இவர் புர்ஷா மாகாணத்திலுள்ள உள்ள காட்டில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். இந்த நிலையில் தன்னிலை மறந்த முட்லு தனது நண்பர்களை விட்டு, காட்டில் வழிதவறிச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் முட்லு வீடு திரும்பவில்லை.
இதனைத் தொடர்ந்து முட்லுவைக் காணாத அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் காட்டுப் பகுதியில் தேடுதலில் இறங்கினர். அப்போது முட்லு போலீஸாருடன் சேர்ந்து உண்மை நிலவரம் அறியாமல் தானும் தேடுதல் பணியில் இறங்கினார்.
சில மணி நேரத்திற்குப் பிறகு முட்லுவுக்கு போலீஸார் தன்னைத் தான் தேடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீஸாரிடம் என்னைத்தான் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று முட்லு கூற, அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.