டுபாயில் பிரம்மாண்ட டிஜிட்டல் கலை மையம்
டுபாயில் திரையில் அசையும் ஓவியங்களுடன் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான ‘டிஜிட்டல் கலை மையம்’ நேற்று திறக்கப்பட்டது. இந்த கலை மையத்தை நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டுபாய் கலாசாரம் மற்றும் கலை ஆணையத்தின் சார்பில் திரையில் ஓவியங்கள் நலாபுறமும் அசைந்து ஒளிரும் வகையிலான பிரமாண்டமான ‘டிஜிட்டல் கலை மையம்’ உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 700 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு வடிவங்களில் உள்கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக அறையின் சுவர்கள் மற்றும் தரை தளங்கள் திரையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.அழகிய உருவங்களை திரையில் காட்டுவதற்கு ஏற்ப இந்த கலை மையத்தின் உள்ளே 130 புரஜெக்டர்கள் மற்றும் அசையும் ஓவியங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் ஓவியங்களை தத்ரூபமான சூழ்நிலையில் இசையுடன் ரசிப்பதற்கு வசதியாக 58 ஸ்பீக்கர்கள் அரங்கங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல புரஜெக்டர்களில் பல்வேறு அரங்கங்களில் மொத்தம் உயர்தரத்திலான 3 ஆயிரம் அசையும் ஓவியங்கள் திரையிடப்பட்டு வருகிறது.இந்த டிஜிட்டல் அசையும் ஓவியங்களில் கடல் அலை, பசுமையான காடுகள், பென்சில் ஓவியம் போன்ற தெருக்கள் மற்றும் மரங்கள், ஜப்பான் நாட்டின் படக்கதை ஓவியங்கள் போன்றவை ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே நடந்து சென்றால் தத்ரூபமாக நாலாபுறமும் அசையும் ஓவியங்கள் அந்த அரங்கத்தில் உயிரூட்டம் பெறுவதாக உள்ளது.
இந்த டிஜிட்டல் கலை மையத்தை டுபாய் கலாசாரம் மற்றும் கலை ஆணையத்தின் தலைவர் ஷேக்கா லத்திபா பிந்த் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். அவருடன் சிறப்பு விருந்தினர்களாக பிரான்ஸ் நாட்டின் தூதர் சேவியர் சாட்டெல், துணைத்தூதர் ராஜா ராபியா, நெதர்லாந்து நாட்டு தூதரகத்தின் துணைத்தூதர் எஸ்தர் வான் சோமரன், ஜப்பான் நாட்டு தூதர் அகிஹிகோ நகஜிமா, ஸ்பெயின் நாட்டின் தூதர் ஜெய்ம் சான்செஸ் செர்வெரா, துணைத்தூதர் கார்மன் டி ஆன்டோனியோ செரானோ மற்றும் துபாய் கலை மற்றும் கலாசார ஆணையத்தின் பொது இயக்குனர் ஹாலா பத்ரி ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.
இந்த டிஜிட்டல் கலை மையமானது வளைகுடா நாடுகளிலேயே மிகப்பெரியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வியாழக்கிழமை முதல் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.